'அநுராதபுரத்தின் முதுசொம்'
பூர்வீக கதவுகளைத் தட்டும்
வரலாற்று ஆவணங்கள் மீதான வாசிப்பு
- எல். வஸீம் அக்ரம்
இலங்கையின் வரலாற்றில் அநுராதபுரப் பிரதேசம் தனித்துவமிக்க ஒன்றாக
இருக்கின்றது என்ற கருத்து வரலாற்று ஆய்வாலர்களால் அடிக்கடி
முன்மொழியப்படுகின்றது. இவ்வாறு தவிர்க்க முடியாத ஒரு பிரதேசத்தின்
சிறுபான்மை சமூகத்தின் இருப்பை ஆவணப்படுத்த வேண்டிய தேவை அந்தந்த
சமூகங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறான ஒரு பணியை அநுராதபுரம் முதுசம்
நிறைவேற்றியுள்ளது என்று புலங்காகிதமடைகிறோம்.
அத்துடன் இலங்கை
முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்கின்ற அல்லது செய்யப்பட்ட ஆய்வுகளின்
முக்கிய கருப்பொருளில் அநுராதபுரத்து இரசாதானியிலிருந்து ஆய்வு செய்ய
வேண்டும் என்பது அநுராதபுர முதுசத்தின் பிரதான அடைவாக இருக்கின்றது.
தவிரவும் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் அநுராதபுர நகரப் பிரதேச வாழ்
மக்களின் வரலாற்று ஆவணங்களை பூர்வீகம், அரசியல், சமூகவியல், பண்பாடு,
நாகரீகம், கல்வி மற்றும் கலை இலக்கியம் என்ற பல்வேறு துறைகள் ஊடாக
இன்றுவரையுள்ள விடயங்களையும் அறிந்திடாத முதுசங்களையும் அநுராதபுரம்
முதுசொம் என்ற ஆவணம் நமக்கு கோடிட்டுக் காட்டியுள்ளது.
இவ்வாவணம்
அநுராதபுரத்தில் சேவை பத்து வருடங்களுக்கு மேல் அரச சேவையில் சேவை செய்து,
ஓய்வுபெற்ற ஊழியர்களை கௌரவிக்கும் விழாவில் வெளியிடப்பட்டதாகும். இவ்வாண
காப்பகத்தை நூலாக்கியவர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள். இந்த சமூகத்
தேவையை உதவியவர் அல்ஹாஜ் எச்.எஸ்.ஏ. முத்தலிப் அவர்கள்.
இன்று
அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் தமது இருப்பை பதிவு செய்வதில் அவர்களது
வரலாறு தொடர்பான தவறான புரிதல்கள் இருப்பதானல் இவ்வநுராதபுர முதுசொம் இந்த
சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு அலப்பரிய சாதனையை
நிறைவேற்றியுள்ளது என்று முகுடம் சூட்டலாம். வெறும் வார்த்தை
கதையாடல்களுடாக சிறுபான்மைச் சமூகத்தின் இருப்பை விலைபேசிக் கொண்டு
இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் ஆவண ரீதியாக மட்டும் பேச விளைகின்ற
இவ்வாறான முயற்சியை நாம் முன்னின்று வாழிநடத்தவும் வாழ்த்தவும் வேண்டும்.
காலம்
காலமாக முஸ்லிம் சமூகத்தை ஒரு வியாபார சமூகமாக பேச விளைகின்ற இன்றில்
அதற்கு ஒரு படி மேலே சென்று கிட்டத்தட்;ட பல நூறு ஆண்டுகள் பின் சென்று
அநுராதபுர நகர முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணமாக்கியுள்ளனர்.
இந்நூலில்
அல்லது ஆவணத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.பி.எம். ஹூசைன் அவர்களின்
'அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்' என்ற கட்டுரையும், ஆய்வு முகாமையாளர்
எம்.எம். அலிகான் அவர்கள் எழுதிய 'ம(று)றைக்கப்படும் வரலாறு' என்ற
கட்டுரையும் நூலராசியர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் எழுதிய
'அநுராதபுரம் முஸ்லிம்களின் பல்வேறு பதிவுகள்' என்ற கட்டுரையும் நூலுக்கு
மகுடம் சேர்க்கின்றன.
இந்நூலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளர்
ஏ.பி.எம். ஹூசைன் அவர்களின் 'அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்' என்ற கட்டுரை,
அநுராதபுர முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைப் பேசுகின்றதுடன்
பாரம்பரியங்களையும் பேசுகின்றன. அவற்றில் குடியேற்றங்கள்,
குடிப்பரம்பல்கள், அம்மக்களின் ஆரம்ப வாழ்வு பற்றி நிறைவாகப் பேசுகின்றன.
ஆய்வு
முகாமையாளர் எம்.எம். அலிகான் அவர்கள் எழுதிய 'ம(று)றைக்கப்படும் வரலாறு'
என்ற கட்டுரை பிந்திய குடியேற்றங்கள், அவற்றின் பெயர்வு, அதற்கு பின்னணியான
அரசியல் முறைகள் இன அச்சுறுத்தல்கள் என்பன பற்றிய விடயங்கள் ஆதாரபூர்வமாக
சுட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு கட்டுரைகளும் வரலாற்றின் தன்மையை
பேசுகின்றது.
இவ்வொவொரு கட்டுரையின் பின் புலத்திலும் அநுராதபுர முஸ்லிம்களின் வரலாறு பின்வருமாறு பதிவு செய்யப்படுகின்றது.
கி.மு
6ம் நூற்றாண்டில் விஜயனின் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இலங்கை வரலாற்றுக்கு
முற்பட்ட காலத்திலேயே, இலங்கையில் அராபியர், பாரசீகர், எகிப்தியர் எனும்
முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் வாழ்ந்ததற்கான, வர்த்தக நோக்கத்திற்காக
பயணத்ததிற்கான சான்றுகள் உள்ளன எனக் கூறி, அச்சான்றுகளையும் இவர்
இக்கட்டுரையினூடாக முன்வைத்துள்ளார். முஸ்லிம்கள் அநுராதபுர நகரின்
திசாவௌகம, பொன்னாரங்குளம், கும்பிச்சங் குளம், ஆமன்னரத்மல, நாச்சியாதுவ
ஆகிய பிரதேசங்களில் தமது ஆரம்ப குடியிருப்புக்களை நிறுவினர் எனத் தொடரும்
இவரது கட்டுரை இன்னும் பல விடயங்களை முன்வைக்கின்றது.
மேலும்
அநுராதபுரத்தை ஆண்ட பண்டுகாபய மன்னன் தொடக்கம் பல மன்னர்கள் அரேபியர்களுடன்
கொண்டுள்ள வர்த்தக தொடர்புகள் பற்றியும் இக் கட்டுரையில்
ஆராயப்பட்டுள்ளது. அக் கால கட்டத்தில் கச்சுத்தோட்டம், இசுறுமுனி,
வெஸ்ஸகிரிய, ஒட்டுப்பள்ளம், திசாவௌகம, மிரிசுவெட்டி போன்ற இடங்கள்
முஸ்லிம்களின் குடியிருப்புக்களாக விளங்கின. சிங்கள மன்னரின் கீழ்
'விதானை'யாக சேவையாற்றிய 'முத்து விதானை அசனார்' என்பவரின் வீட்டிலுள்ள இரு
கற்றூணில் அவரது பெயர் முதலெழுத்துக்களைக் குறிக்கும் 'மு.அ' எனும் தமிழ்
ஈர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
என்ற தகவல்களைப் பதிவு
செய்துள்ளன. இவ்வாவணக் காபகத்தில் அநுராதபுரம் முஸ்லிம்களின் பல்வேறு
பதிவுகள் என்ற கட்டுரை முன்னர் குறிப்பிட்ட ஏனைய இரு கட்டுரைகளிலும்
இருந்து சற்று வேறுபட்டு மிக அண்யைத் (பிந்திய தகவல்கள்) தரவுகள் வரை பதிவு
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பிந்திய தரவுகள்
குறிப்பாக முஸ்லிம்களின் இன்றைய கல்வி, கலை இலக்கிய, சமயம் என்ற பெரும்
பண்புகளால் நிறுவப்பட்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய தகவல்கள்
குறிப்பிட்டுச் சொல்லுளவுக்கு எந்த ஒருவரிடமும் இருக்கவில்லை. அவற்றை
வாய்மூலமாக மட்டுமன்றி குப்பைத் தொட்டிகளிலுள்ள ஆவணங்கள் வரை கிளறி எடுத்து
ஆவணமாக பேச முனைந்துள்ளதை இங்கு விதந்து குறிப்பிட வேண்டும்.
ஒரு
கல்வியலாளராக, இலக்கிய கர்த்தவாக, ஆய்வாளராக, சமூக சேவகராக என்ற பல்பரிமாண
முகங்கொண்டு அன்பு ஜவஹர்ஷா இந்த ஆவணங்களைப் பதிவு செய்துள்ளார். இந்தப்
பதிவுகளில் உள்ள புகைப்படங்கள் முஸ்லிம்களின் மிக நுண்ணிய பிரச்சினைகளையும்
பூர்வீக புதிவகள் மற்றும் களைவுகளையும் முன்னிறுத்தியுள்ளதை மனங்கொள்ள
வேண்டும். ஆய்வு மாணவனாக சமூகத்தின் சகல விடயங்களின்பால் தன்னை
செயற்படுத்தி தன்னை விஞ்சிய பணியை செய்துள்ளதாக புகழ முடியும்.
இந்தக்
கட்டரையில் சமயம், கல்வி, கலை இலக்கியம், அரசியல் தொடர்பான அரிய தகவல்கள்
பதியப்பட்டுள்ள. அவற்றில் துறைசார் நிறுவனங்களின் மூலம், தோற்றம், அதன்
பின்புலம், அவற்றுக்கு பணியாற்றியவர்களின் பெயர்கள் அவர்களின் பணி முறைகள்
என்ற விடயங்கள் மிக விரிவாகவும் நுட்பமாகவும் பொறுப்புடனும் பதிவுகளாக
இருக்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றைப் பதிவு செய்கிறேன்.
1870 ம்
ஆண்டு திசாவௌ குளத்தின் மத்தியில் காணப்பட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட பௌத்த மத
வணக்கஸ்தலம் அல்லாத மத வழிப்பாட்டுத் தளங்கள் அகற்றப்பட்டன என்ற
இனப்பிரிப்புச் செய்தி இங்கு பதியப்பட்டுள்ளது. இவற்றுடன் அநுராதபுர
பள்ளிவாசல்கள் ஒட்டுப்பள்ளம் தர்கா உள்ளிட்ட தற்போதைய பள்ளிவாசல் நிர்மாணம்
பற்றிய தகவல்களையும், அவற்றுடன் தொடர்புடைய பின்னணித் தகவல்களையும்,
மத்ரஸா, தக்கியா, அரபுக் கல்லூரிகளுட்பட்ட மார்க்கக் கடமைகளை
மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ஆதாரபூர்வமாக இவர்
முன்வைத்துள்ளார். இங்கு விதந்து குறிப்பிட வேண்டி ஒரு விடயம் 2012ம் ஆண்டு
உடைக்கப்பட்ட ஒட்டுப்பள்ளம் தர்காவின் வரலாறும் அதே ஆண்டு
தீக்கிரையாக்கப்பட்ட தக்கியா பற்றிய பதிவுகளும் இங்கு இருக்கின்றரதாகும்.
கல்வி
தொடர்பான ஆய்வில் பாடசலைகளின் தோற்றம், அதில் பதிவு செய்த மாணவர்கள்
மற்றும் இன்னும் அரிதான தகவல்களைப் பதிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்கது.
அநுராதபுர நகரில் உள்ள ஸாஹிரா மகா வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா
வித்தியாலம் ஆகிய இரு பாடசாலைகளின் தோற்றம், வளர்ச்சி என்ப இங்கு
பதிவாகியுள்ளதுடன், அவற்றின் தோற்றத்திற்கு முன் இவர்களது கல்வி முறை பற்றி
பதிவுகளும் காணப்படுகின்றன. (கட்டுரையில் உள்ள விடயங்களை சுருக்கமாக பதிவு
செய்கிறேன்)
இந்நூலில் தொகுக்கபட்டுள்ள காலை இலக்கியம் சார்ந்த
பதிவுகள் ஏலவே பல்வேறு கட்டரைகள் வாயிலாக (அன்பு ஜவஹர்ஷா)
பேசப்பட்டிருந்தமையினால் அவற்றினை மிக எளிய வடிவங்களைக் குறிப்பிடலாம். கலை
இலக்கியங்கள் காலத்தின் பதிவுகள் என்ற அடைமொழியை அவை நிறுவியுளுள்ளன.
குறிப்பாக அநுராதபுரத்திலிருந்து வெளிவந்த கலை இலக்கிய ஆவணங்களையும்
வெளிவரும் சஞ்சிகைகள் பற்றிய குறிப்புக்களும் தொடர் அடிப்படையில்
காட்டப்பட்டுள்ளன. அவையாவன:
• சிக்கந்தர் மகத்துவக்கும்மி (1928 -முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
• விதி-அறிவு-விளக்கம் (1938-முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
• கைபுட்சிக மாலை (உமர்லெப்பை ஆலிம் சாய்பு - அநுராதபுரத்தில் வெளியீடு)
• தமிழ்மணி கையெழுத்துச் சஞ்சிகை (எம்.எஸ்.ஹூசைன்)
• இளைஞர் குரல் (இரு ஆசிரியர்களுள் ஒருவர் மர்ஹூம் அமீர் சுல்தான்)
• மாணவர் குரல் (அண்டன் ஞானராஜா)
• தமிழ்ச்சுடர் (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா)
• புத்தொளி (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா)
• வீரத் தமிழன் (மர்ஹூம் எஸ்.எச். எம்.ஸஹீர் )
• தேன்துளி (மர்ஹூம் எஸ்.எம். ஸாலிஹ்)
• பிறையொளி பாடசாலைச் சஞ்சிகை (அன்பு ஜவஹர்ஷா)
• பொறிகள் - தெகுக்கபட்ட கவிதைகள் (அன்பு ஜவஹர்ஷா)
• காவிகளும் ஒட்டுண்ணிகளும் - (அன்பு ஜவஹர்ஷா)
• அன்னை (எப். ஆர் பரீட்ஹ்)
• அல் மதீனா (எப். ஆர் பரீட்ஹ்)
• தொலைச்சுடர் (ஜன்ஸி கபூர் )
• அநுராகம் (ஜன்ஸி கபூர் , எப். ஆர் பரீட்ஹ், ஏ.பி.எம். அன்சார் )
• படிகள் (எம். வஸீம் அக்ரம்)
இங்கு
பதியப்பட்டுள்ள விடயங்களில் அரச துறைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின்
வரலாறு மிக முக்கியமான பதிவுகளாக கொள்ளலாம். அரச சேவையில் முஸ்லிம்களின்
பணி என்பது அப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கிய ஆவணமாக
இருக்கின்றது. இதில் அநுராதபுர இராசதாணி முதல் அரச நிறுவனங்களில் சாதாரண
இலிகிதர் வரை சேவையாற்றியவர்களின் அனைத்துவிடயங்களும் அடக்கப்பட்டுள்ளமையை
இன்னும் மெச்ச இயலும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம்
பெண்களின் சமூக கலாசாரப் பணிகள், விளையாட்டுத் துறைகளில் ஈடுபட்டு சாதணைகள்
புரிந்தவர்களின் பெயர்கள் என்ற பல்வேறு தரவுகள் தொடர்புற்றும் தொடர்பு
படாமலும் பதியப்பட்டுள்ளமை ஈர்ந்து கவனிக்கத்தக்கது.
நூலின்
(கட்டுரையின்) பின் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள், ஆவணங்கள்
பற்றிக் குறிப்பிடுவது இந்த நூலின் மிக முக்கிய கட்டம் எனலாம். இதில்
பல்வேறு ஆவணங்கள் சுமார் 100 ஆண்டுகளை திரும்பிப் பார்க்க வைக்கின்றன.
இதில் 1900 களில் அநுராதபுர புதிய நகரப்; பிரதேசத்தில் பிறந்த பிள்ளைகளின்
பிறப்பத்தாட்சிப் பத்திரம், அநுராதபுரம் பழைய நகர், புதிய நகருக்கு
மாற்றப்பட முன்னர் இருந்த குடியிருப்பு விதியமைப்புத்திட்டங்கள், பிச்சைத்
தம்பி முஹதீன் தம்பி என்பவர் 1946ம் ஆண்டு நகர (தற்காலிக) முதல்வராக
நியமனம் பெற்ற கடிதத்தின் பிரதி, 1899ம் ஆண்டு அநுராதபுரம் பழைய நகர
முஸ்லிம்களின் இருப்பை பதிவு செய்துள்ள மாகாணப் பதிவின் வெளியீட்டு
அடையாளம், அந்த ஆவணத்தில் முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள
பத்தியின் பக்கப்பிரதி, 1891ல் திசாவௌ எனும் இடத்தில் முஸ்லிம்களுக்குச்
சொந்தாமான காணியொன்றின் உறுதிப்பத்திரம், 1960 ஆண்டு பழைய நகர்
பள்ளிவாயலின் பரிபாலன சபை விபரம், 1989.10.18 அன்று பிறந்த பிச்சைத் தம்பி
மொஹிதீன் தம்பியின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தில் அவரது தந்தையின் தொழில்
நகர பாதுகவலர் அநுராதபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஆவணம், அவரது காதி
நீதாவன் விண்ணப்பம், 1989ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள
காணியின் நில அளவைப் படம், 1957ம் ஆண்டு முதல் முறையாக அகில இலங்கை மட்ட
உதைப்பந்தாட்டப் போட்டியில் 9 முஸ்லிம் இளைஞர்கள் கலந்து கொண்டமைக்கான
பத்திரிகைச் செய்தி, 1927ம் ஆண்டு ஒட்டுப் பள்ளம் தர்காவில் ராத்தீப்
நடத்தியவர்களின் பெயர்ப் பட்டியல், 1959, 1961ம் ஆண்டுகளில் முஸ்லிம்களிடம்
பெறப்பட்ட காணிகளுக்கான வர்த்தமாணி, 1958.12.12. அன்று இருந்த முஸ்லிம்
வாலிபர் சங்க நிர்வாகிகளின் கடிதம், 1957ம் ஆண்டு சுங்காரு உழவு இயந்திர
நிலையத்தில் கனிசமான முஸ்லிம்கள் வாழ்ந்ததந்கான புகைப்படம், 1967களில் நகர
முஸ்லிம் இளைஞர்களின் சமூக சேவா நிறுவனத்தின் அங்குரார்ப்பணப் புகைப்படம்,
1968ம் ஆண்டு முஸ்லிம் வாலிபர் சங்கத்தினால் கட்டிகொடுக்கப்பட்ட முஸ்லிம்
கனிஷ்ட வித்தியாலயத்தில் முதல் நாள் சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்கள்,
1967ம் ஆண்டு மே தின ஊர்வலம் நடத்திய முஸ்லிம் சோசலிசக் கட்சியின் ஊர்வலப்
புகைப்படம், முஸ்லிம்களின் பூர்வீகத்தை நிறுவுகின்ற மு.அ என்று
அழைக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதியின் பெயர் பொறிக்கபட்ட கற்தூண்கள்
இரண்டின் புகைப்படம். உள்ளிட்ட இன்னும் பல ஒளிப்படங்கள், புகைப்படங்கள்
சமய, சமூக, கல்வி, கலை இலக்கிய, விளையாட்டு மற்றும் அடையாள விடயங்களின்
முஸ்லிம்களின் இருப்பை பதிவு செய்கின்ற ஆவணங்கள் இணைக்கபட்டுள்ள.
இந்த ஆவணங்களில் பெரும்பாலனவை மர்ஹூம் அல்ஹாஜ் அமீர் சுல்தான் அவர்களின் ஆவணங்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.
இந்த
சகல பதிவுகளுக்குப் பின்னும், இந்தப் பதிவுகளை ஆவணமாக்கவும் சமூக
மாற்றத்திற்காக உழகை;கின்ற ஒரு சக்தியாகவும் இருக்கின்ற தனிமனிதர்களும்
குழுக்களும் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இது தவிர இந்த
முயற்சி பெரும்பான்மைச் சமூகத்திற்குள் இருக்கின்ற சிறுபான்மைச்
சமூகங்களின் இருப்பை பாதுகாக்கின்ற அறிவுபூர்வமான ஒன்றாக கருதலாம். இது
அநுராதபுர சிறுபான்மைச் சமூகத்திற்கு மட்டும் உரித்தான குறைந்த பட்ச
முயற்சியாக இருப்பினும் இது ஈழத்து ஆவண காப்பாளர்களின் தேவையாக
இருக்கின்றது. இவ்வாய்வுக் கட்டுரைகள் மற்றும் ஒளிப்படங்கள், புகைப்படங்கள்
என்பன இணையத்திற்கு பதிவேற்றப்பட வேண்டியதன் தேவை இங்கு வழியுறுத்த
வேண்டும்.
ஏதிர்காலங்கள் விரல் அடையாளங்களுக்குள் மட்டும்
மட்டுப்படுத்தப்படுகின்ற நிலை தோன்றியுள்ள நவ யுக நிலையில் அதற்கான காப்பு
முயற்சிகளை இப்போதே ஆரம்பிப்பது சாலச்சிறந்தது என்று பணிவுடன்
குறிப்படுகிறேன்.